வியாழன், 2 ஜனவரி, 2014

ஒட்டுதலும் ஒட்டாமையும்: இரண்டு குறள்


வார்த்தைக்கு வார்த்தை உதடுகள் ஒட்டும் ஒரு குறள்: 
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.






ஒரு வார்த்தை கூட உதடுகள் ஒட்டாமல் சொல்லும் ஒரு குறள்:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.

ஜனவரி 1 புத்தாண்டு அது மட்டும் தானா....?

 1.     மாமேதையின் பிறந்த நாள்
 


விஞ்ஞானம், கணித இயற்பியல் போன்றவற்றில் முக்கிய கண்டுபிடிப்புகள் மேற்கொண்டவர் சத்தியேந்திர போஸ். 1920களில் குவாண்டம் எந்திரவியலில் இவர் மேற்கொண்ட ஆய்வுக்கு போஸ் & ஐன்ஸ்டைன் புள்ளியியல் உருவாக முக்கிய காரணமாக விளங்கின. சத்தியேந்திர நாத் போஸுக்கு சிறுவயதில் இருந்தே கணிதத்தில் தீவிர ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக கல்லூரியிலும் கணிதத்தில் இளங்கலை, முதுகலை பட்டங்களை மட்டுமே படித்தார். 1918ஆம் ஆண்டுக்கு பிறகு இயற்பியல் குறித்து ஆராய்ச்சியில் இறங்கி பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தார்.


இது பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டன் உடைய கவனத்தையும், மற்ற இயற்பியல் விஞ்ஞானிகளின் கவனத்தையும் ஈர்த்தது. இதனால் எக்ஸ்ரே, ஒளியியல் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஐரோப்பிய அறிவியலாளர்கள் அவரை அழைத்தனர். ஐரோப்பாவில், மேரி க்யூரி, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லூயி டி பிராக்ளி போன்ற எண்ணற்ற விஞ்ஞானிகளுடன் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். வங்காளம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றவரான போஸுக்கு 1954ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தது. ஒளியியல், ஒளித்துகள் குறித்த முக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட போதிலும் அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்படவே இல்லை. இந்தியாவின் மேதையின் பிறந்த நாள் ஜனவரி 1, 1894 இன்றுதான்.
  2.     சீனாவில் ஜனநாயக ஆட்சி


 இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் முன்னணியில் இருப்பது சீனா. 1644ஆம் ஆண்டு முதல் 1911ஆம் ஆண்டு வரையில் சீனாவை சிங் வம்சம் ஆட்சி செய்து வந்தது. சிங் வம்சத்தின் ஆட்சியில் எண்ணற்ற உள்நாட்டு கிளர்ச்சிகள், வெளிநாட்டு அச்சுறுதல்கள் மூலமாக லட்சக்கணக்கான சீனர்கள் இறந்து போயினர். இதுமட்டுமல்லாமல் முறையற்ற வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலமாக சீனாகடுமையான பொருளாதார பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருந்தது. இதுதவிர, ஆட்சி அதிகாரம் சிறுபான்மையினராக இருந்த மஞ்சு இன மக்களிடம் இருந்து பெரும்பான்மையினராக இருக்கும் ஹன் சீனர்களுக்கு கிடைக்கவேண்டும் என்று போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன.
இதன் காரணமாக சிங் வம்சத்தினர் ஒரு அரசியலமைப்பை 1906ஆம் ஆண்டு உருவாக்கினர். ஆயினும் அது சரியாக செயல்பட்டவில்லை. இதனால் எண்ணற்ற புரட்சிக் குழுக்கள் உருவாகின. 1911ஆம் ஆண்டு சீனா மன்னர் பகுதிகளுக்கும், புரட்சிக்குழுக்களுக்கும் இடையே கடுமையான போர் ஏற்பட்டது. இறுதியாக 1911ஆம் ஆண்டு சீனாவின் மன்னராட்சி அகற்றப்பட்டது.
 1912ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி, சீனாவில் மக்களாட்சி நிறுவப்பட்டது. அதன் தற்காலிக அதிபராக சென்யாட் சென் அறிவிக்கப்பட்டார்.
     3.     டிராவலர்ஸ் செக் அறிமுகம்


 இன்று, வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், தனது பணத்தேவைக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் போன்றவற்றை பயன்படுத்துவார்கள். ஆனால் 1990களுக்கு முன்பாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அனைவரும் பணம், படுக்கை, பாஸ்போர்ட்டுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமாக எடுத்து செல்லும் சாதனம் டிராவலர்ஸ் செக். அதிலும் சுற்றுலா பயணிகள், டிராவல்ஸ் செக் இல்லாமல் பணம் செலவழிப்பது மிகவும் கஷ்டம். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக கருதப்பட்ட டிராவலர்ஸ் செக் முதன் முதலாக இங்கிலாந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. லண்டன் கிரெடிட் எக்சேஞ்ச் கம்பெனி என்கிற நிறுவனம் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் வியாபாரிகளுக்காக செக் எனப்படும் இந்த காசோலையை முதன் முதலாக 1772ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி அறிமுகம் செய்தது.
  4. புதிய பேரரசி


19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவின் முக்கிய சக்திகளாக மராத்திய, முகலாய, சீக்கிய சாம்ராஜ்ஜியங்கள் திகழ்ந்தன. 1830களுக்கு பிறகு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி என்கிற நிறுவனம் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. 1857ஆம் ஆண்டு, முதல் இந்திய சுதந்திர போர் நடைபெற்றது. இந்தியாவில் மீரட் நகரில் தொடங்கிய இந்த போர், உத்திரபிரதேசம், உத்திரகாண்டம், வடக்கு மத்திய பிரதேசம், டெல்லி போன்ற பகுதிகளை மையம் கொண்டிருந்தது. அந்த போரில் இந்திய போராளிகளை கம்பெனி வெற்றிகரமாக வீழ்த்தியது.
இருப்பினும் கம்பெனியின் செயல்முறைகள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தவில்லை. அதனால், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை நேரடியாக அமல்படுத்தும் முயற்சிகளில் இறங்கியது. அடுத்த சில வருடங்களில் இந்தியா நேரடி பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் வந்தது. இருப்பினும் 1877ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரெலி, பேரரசி விக்டோரியாவை, இந்திய பேரரசி என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான தினம், 1877ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 தேதி !
  5. அடிமைகளுக்கு விடுதலை


அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான சம்பவங்களில் ஒன்று அமெரிக்க உள்நாட்டு போர். அமெரிக்க அரசுக்கு எதிராக கன்படரேட் மாநிலங்கள் ஒன்றிணைந்து போரிட்டன. இந்த காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக ஆப்ரகாம் லிங்கன் இருந்தார். அமெரிக்காவின் பெரும் பிரச்னையாக விளங்கிய இந்த போர், அமெரிக்க சமூக, பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்திவிட்டது. உள்நாட்டு போர் மூன்று வருடங்கள் நடந்து முடிந்த நிலையில் அதிபர் லிங்கன், விடுதலை பிரகடனம் ஒன்றை அறிவித்தார். அதன்படி அமெரிக்காவில் வாழும் கருப்பர் இன அடிமைகள், அமெரிக்க அரசுக்காக போரிடுவதற்கு வழிவகுத்தது. அதன் மூலமாக அதுவரையில் அடிமைகளாக இருந்த கருப்பர் இன அடிமைகளுக்கு இது பெரும் மகிழ்ச்சியை தந்தது.
ஆயிரக்கணக்கான கருப்பர் இன மக்கள் அமெரிக்கப் படையில் சேர்ந்து கான்படரேட் மாநிலங்களுக்கு எதிராக போரிட்டனர். அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் மட்டும் 30 முதல் 40 லட்சம் அடிமைகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிமைகளை விடுதலை செய்ய மேற்கொள்ளப்பட்ட பிரகடனம், 1863ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி அறிவிக்கப்பட்டது.




இப்படி வரலாற்றில் ஏராளமான சம்பவங்கள் நடந்தேறிய தினம் ஜனவரி
1.